திருவிக நகர் பகுதியில் தீவிர பிரசாரம்; வருடம் முழுவதும் பிரதமர் தங்கினாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது: திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பேச்சு

தண்டையார்பேட்டை: திருவிக நகர் தெற்கு பகுதியில், திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி இன்று காலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஓட்டேரி, மேடவாக்கம் விநாயகர் கோயில் தெருவில் இருந்து பிரசாரத்தை தொடங்கி வரதம்மாள்தோட்டம், ரங்கநாதபுரம், ரெட்டி காலனி, சுவாமி பக்தன் தெரு, ஒத்தவாடை எஸ்ஆர்எம் நகர், படவேட்டம்மன் கோயில் தெரு, செல்லப்பா தெரு, நாராயண மேஸ்திரி தெரு, பொன்னியம்மன் திருவிக தெரு, பிரித்தளின் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பகுதி செயலாளர் சாமிக்கண்ணு, இளைஞரணி அமைப்பாளர் மகேஷ்குமார், லயன் உதயசங்கர், இசட் ஆசாத் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்குசேகரித்தனர். அப்போது, பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின்போது நிருபர்களை சந்தித்து வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி கூறுகையில், ‘‘கொடுங்கையூர் குப்பைமேட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு பணிகளை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். நீண்டகால பிரச்னையான கொடுங்கையூர் குப்பைமேடு பிரச்னை சரிசெய்யப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதியில் 7 ரயில்வே கிராசிங்கில் 4 ரயில்வே கிராசிங் பணி நடைபெற்று வருகிறது. நாங்கள் செய்யவேண்டிய வேலைகள் இன்னும் இருக்கிறது.

முன்னேற்றமடைந்த அமெரிக்காவிலே அனைத்து திட்டத்தையும் முடித்துவிட்டோம் என கூற முடியாது. தொடர்ந்து மக்கள் பணி செய்து வருகிறோம். பிரதமர் மோடி வருடம் முழுவதும் அமர்ந்திருந்தாலும் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. பிரதமர் தமிழகத்திற்கு அடிக்கடி வருவது எங்கள் வெற்றியை உறுதிசெய்யும்” என்றார்.

The post திருவிக நகர் பகுதியில் தீவிர பிரசாரம்; வருடம் முழுவதும் பிரதமர் தங்கினாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது: திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: