மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரே தேர்தலை கொண்டு வந்து மக்களின் உரிமைகளை பறிப்பார்: வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பேச்சு

தண்டையார்பேட்டை: வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, இன்று திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலையில் பிரசாரத்தை தொடங்கினார். கண்ணபிரான் கோயில் தெரு, வடிவேல் தெரு, நெல்வாய் சாலை, மேல்பட்டி, பொன்னப்பன் தெரு, சின்னய்யா காலனி, கன்னிகாபுரம் கஸ்தூரிபாய் காலனி, வெங்கடேசபுரம் நியூ காலனி, வஉசி நகர் மெயின் ரோடு, சாஸ்திரி நகர் கணேசபுரம், அம்பேத்கர் கல்லூரி சாலை, அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அவருக்கு வழிநெடுக பொதுமக்களும் திமுகவினரும் பூக்களை தூவி ஆரத்தி எடுத்து சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

அப்போது கலாநிதி வீராசாமி பேசுகையில், நீண்ட நாள் பிரச்னையான கணேசபுரம் சுரங்கபாலத்தில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. பழுதான அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு திடல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. கன்னிகாபுரம் கால்பந்தாட்ட மைதானத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புளியந்தோப்பு பகுதியில் இருந்து ஓட்டேரிக்கு செல்லும் ஸ்டீபன்சன் சாலையில் மழைக்காலங்களில் கால்வாயில் இருந்து கழிவுநீர் கலந்து நிற்பதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் இருந்தது. அதற்கு, முதல்வரின் உத்தரவின்பேரில் புதிதாக மேம்பாலம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர், ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறார். அதில் முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம், அரசு உதவி பெறும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் சிறுவர்களுக்கு காலை உணவு திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் காரணமாக வாக்கு சேகரிக்க செல்லும்போது உற்சாக வரவேற்பு அளிப்பது தெரிகிறது.

திமுக அரசு ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றக்கூடிய ஒரே அரசு திமுகதான். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரே தேர்தலை கொண்டு வந்து மக்களின் உரிமைகளை பறிப்பார். சிந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்’ என்றார். பிரசாரத்தின் போது அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா,திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, திருவிக நகர் வடக்கு பகுதி செயலாளர் தமிழ் வேந்தன் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரே தேர்தலை கொண்டு வந்து மக்களின் உரிமைகளை பறிப்பார்: வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: