திருப்பூர், மார்ச் 29: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பாக நேற்று கல்லூரி முன்பு மனித சங்கிலி அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் பேசுகையில், அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது உரிமை, நமது உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது. நமது வாக்கு விற்பனைக்கு அல்ல, தங்களது கடமையையும், உரிமையையும் வியாபாரமாக மாற்ற கூடாது. வாக்காளிப்பது புனிதமான உரிமை, இது நமது நாட்டிற்கு செலுத்த வேண்டிய கடமை, அனைவரும் வாக்காளர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும்.
முதன் முதலாக வாக்களிப்பார்கள் தவறாமல் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்றார். பிறகு மாணவ செயலர்கள் செர்லின், திணேஷ் கண்ணன், மது கார்த்திக், ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் முஸ்தாக், தீபக் ஆகியோர் மனித சங்கிலி அமைத்தும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் முதல் வாக்கினை தவறாதே, அது உன் உரிமை மறக்காதே, என் முதல் உரிமை, அதுவே என் கடமை, தாயின் தாலாட்டு, நீ போடு முதல் ஓட்டு போன்ற கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
The post 100 % வாக்களிப்பு கோரி மனித சங்கிலி அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு appeared first on Dinakaran.