குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு வாரத்தில் பாலியல் தொழில் நடத்திய பிரபல புரோக்கர் கைது: லாட்ஜ் மேலாளரும் சிக்கினார்

சென்னை: குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு வாரத்தில், இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய பிரபல பாலியல் புரோக்கர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேப்பாக்கம் மியான் சாகிப் 1வது தெருவில் உள்ள லாட்ஜிக்கு வரும் வாடிக்கையார்களிடம், இளம்பெண்களின் புகைப்படங்களை காட்டி, பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, திருவல்லிக்கேணி பக்கிர் சாஹிப் தெருவை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கர் இம்டாப் பாஷா (எ) இம்ரான் (26) என்பவர், லாட்ஜ் மேலாளரான திருவல்லிக்கேணி ஆறுமுக வைத்திய தெருவை சேர்ந்த நித்தியானந்தன் (40) என்பவருடன் இணைந்து, இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

ஏற்கனவே, பாலியல் வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இம்டாப் பாஷா, சிறையில் இருந்து வெளியே வந்த ஒரு வாரத்தில் மீண்டும் பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து இம்டாப் பாஷா மற்றும் நித்தியானந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய இளம்பெண் மீட்கப்பட்டார்.

The post குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு வாரத்தில் பாலியல் தொழில் நடத்திய பிரபல புரோக்கர் கைது: லாட்ஜ் மேலாளரும் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: