தனியார் ஊழியரிடம் ₹19.30 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, மார்ச் 27: கிருஷ்ணகிரி அருகே, முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி, ₹19.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். சூளகிரி அருகேயுள்ள மேலுமலை பகுதியைச் சேர்ந்தவர் கவிசந்துரு(27). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 8ம்தேதி, இவரது செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், குறைந்த பணத்தை முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த நம்பரை தொடர்பு கொண்டு கவிசந்துரு பேசினார். பின்னர், அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக ₹19 லட்சத்து 30 ஆயிரத்து 860 அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் கூறியபடி எந்தவித லாபமும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற போது, அந்த நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுபற்றி கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் ஊழியரிடம் ₹19.30 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: