தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதான பாஜ மாவட்ட தலைவரிடம் போலீஸ் காவலில் விசாரணை

செம்பனார்கோயில், மார்ச் 27: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி ரூ.50 கோடி கேட்டு சிலர் மிரட்டல் விடுத்து வந்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தஞ்சை வடக்கு மாவட்ட பாஜ பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத் (32), சீர்காழி ஒன்றிய பாஜ முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ் (33), செம்பனார்கோயில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு (39), தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பாஜ மாவட்ட தலைவர் அகோரத்தை தேடி வந்தநிலையில் கடந்த மாதம் 15ம் தேதி தனிப்படை போலீசாரால் மும்பையில் கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பாஜ மாவட்ட தலைவர் அகோரத்தை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சுப்ரியா, நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கனிமொழி, ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து, அகோரத்தை மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதான பாஜ மாவட்ட தலைவரிடம் போலீஸ் காவலில் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: