விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இதுவரை நடந்த 17 தேர்தல்களில் 12 முறை காங்கிரஸ் கட்சியே வென்று உள்ளது. 2011, 2016, 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் விஜயதரணி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 3 முறையும் வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை களத்தில் பெண்கள் மோதும் தொகுதியாக விளவங்கோடு தொகுதி மாறி உள்ளது. இந்த தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பேத்தி ஆவார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் வி.எஸ். நந்தினி போட்டியிடுகிறார். 42 வயதான இவர், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர்களில் ஒருவராக உள்ளார்.
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக ராணி (41) போட்டியிடுகிறார். தற்போது கட்சியின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளராக உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் மைலோடு பகுதியை சேர்ந்த ஜெமினி போட்டியிடுகிறார். இவரது கணவர் சேவியர்குமார், சமீபத்தில் மைலோடு ஆலய பங்கு தந்தை அலுவலகத்தில் நடந்த மோதலில் கொலை செய்யப்பட்டார். ஆசிரியை பணி காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கினார். தற்போது கணவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 4 பெண்கள் நேரடியாக மோதும் தொகுதியாக விளவங்கோடு பார்க்கப்படுகிறது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 694 ஆண்கள், 1 லட்சத்து 19 ஆயிரத்து 685 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 382 பேர் உள்ளனர்.
The post விளவங்கோடு இடைத்தேர்தல் பெண்களே மோதுகின்றனர் appeared first on Dinakaran.