6 அடுக்குகள், 65 அறைகளுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம்

 

திருப்பூர், மார்ச் 23: திருப்பூர் – அவிநாசி ரோட்டிலுள்ள குமார்நகர் அங்கேரிபாளையம் ரோடு சந்திப்பில் பழைய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் திருப்பூர் மாநகர புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்ட கடந்த 2021ம் ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த ஆண்டே ஜூன் மாதம் இதற்கான திட்டம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு பெற அரசுக்கு அனுப்பப்பட்டது. கமிஷனர் அலுவலகம் கட்ட ரூ.13.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2022 ம் 2.24 ஏக்கரில் அமைய உள்ள புதிய கமிஷனர் அலுவலக கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.

6 அடுக்கு தளத்துடன் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. புதிதாய் கட்டப்படும் கமிஷனர் அலுவலகத்தில், பழைய கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் அனைத்து அலுவலகங்களும் அங்கு செயல்பட உள்ளது. கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. மேலும் கட்டுமான பணிகளை தொடர்ந்து பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரிய உதவி பொறியாளர் கோமதி சங்கரிடம் கேட்டபோது, ‘‘புதிய கமிஷனர் அலுவலகம் கட்டுமான பணிகள் தொடங்கி தற்போது பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. 6 அடுக்கு மாடி கொண்ட பிரம்மாண்ட கட்டிடத்தில் 65 அறைகள் உள்ளது.

இதில் கூட்ட அரங்கு, கமிஷனர் அறை, துணை கமிஷனர்கள் அறை, போலீசில் செயல்படும் பல்வேறு பிரிவு அலுவலகம், பொதுமக்கள் அமரும் இடம், மற்றும் வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகள் ஒரு மாத காலத்திற்குள் நிறைவடயும். அதன் பின்னர் புதிய கமிஷனர் அலுவலகம் திறப்பதற்கான தேதி அதிகாரிகள் கலந்தாலோசித்து நிர்ணயம் செய்வார்கள்’’ என தெரிவித்தார்.

The post 6 அடுக்குகள், 65 அறைகளுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் appeared first on Dinakaran.

Related Stories: