தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்துக்கு வழங்கிய இழப்பீடு தொகை அதிகாரிகளிடம் வசூலிக்காதது ஏன்?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வசூலிக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க அனுமதித்து, பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் இந்த வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. சிபிஐ இதுவரை ஒரு காவல் ஆய்வாளர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பலியானோர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் தான் இழப்பீடு வழங்கப்பட்டதா?. அதிகாரிகளிடம் இருந்து அந்த இழப்பீட்டு தொகையை ஏன் வசூலிக்கவில்லை?.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் அப்பாவி பொது மக்கள்தான். இதுபோன்ற சம்பவம் எதிர்காலங்களில் நடைபெற கூடாது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது என்று தெரிவித்து விசாரணையை மார்ச் 27க்கு தள்ளிவைத்தனர்.

The post தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்துக்கு வழங்கிய இழப்பீடு தொகை அதிகாரிகளிடம் வசூலிக்காதது ஏன்?: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: