ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது

நியூயார்க்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடர், இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. போட்டிகள் ஜூன் 1ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான கோப்பையை உலகம் முழுவதும் எடுத்து சென்று காட்சிப்படுத்துவதற்கான ‘டிராபி டூர்’ அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பிரபலமான எம்பயர் ஸ்டேட் பில்டிங்கில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கேல், அமெரிக்க பந்துவீச்சாளர் அலி கான் இருவரும் கோப்பையின் உலக பயணத்தை தொடங்கி வைத்தனர். ஐசிசி தொடர் அமெரிக்காவில் நடைபெற உள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக நியூயார்க் நகரில் புதிதாக 34,000 இருக்கை வசதி கொண்ட நஸ்ஸாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டபட்டுள்ளது.

டாலஸ் கிராண்ட் பேரைரி ஸ்டேடியம் மற்றும் லாடர்ஹில் புரோவர்ட் கவுன்டி மைதானத்திலும் போட்டிகள் நடக்க உள்ளன. நியூயார்க்கில் 8 போட்டிகளும், மற்ற 2 அரங்குகளில் தலா 4 போட்டிகளும் நடத்தப்படும். தொடரை இணைந்து நடத்தும் வெஸ்ட் இண்டீசில் ஆன்டிகுவா, பார்புடா, பார்படாஸ், கயானா, செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் தி கிரணடியன்ஸ், டிரினிடாட் மற்றும் டுபொகோ மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். டிராபி டூர் 4 கண்டங்களில் மொத்தம் 15 நாடுகளில் நடத்தப்படுகிறது. அர்ஜென்டினா, பிரேசில், கனடா நாட்டிலும் விளையாட்டு ரசிகர்களிடம் கிரிக்கெட் மீது ஈர்ப்பை உருவாக்கும் வகையில் உலக கோப்பை காட்சிப்படுத்தப்பட உள்ளது.

The post ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: