பாஜக உடன் பாமக கூட்டணி: கட்சியில் இருந்து வரிசையாக விலகும் பாமக தொண்டர்கள்.! இணையதளத்தில் ஆவேசம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி இறுதியான நிலையில் பாமகவில் இருந்து வரிசையாக விலகுவதாக இணையத்தில் பாமக தொண்டர்கள் பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான தொகுதிகளையும் ஒதுக்கி கொடுத்துள்ளது. ஆனால் திமுகவை எதிர்த்து போட்டியிடும் கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

நேற்று மாலை வரை அதிமுக – பாமக கூட்டணி உறுதி என இருந்த நிலையில் நேற்று மாலை திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்டக் குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக – பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக உடன் கூட்டணி உறுதியான நிலையில் கட்சியில் இருந்து வரிசையாக விலகுவதாக இணையத்தில் பாமக தொண்டர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

‘கண்டிப்பாக எங்க தொகுதியில் பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடமாட்டோம். இடஒதுக்கீடு துரோகிகளுக்கு என்றும் ஓட்டு இல்லை #வன்னியர் ஓட்டு_ பாஜகவுக்கு இல்லை’ என விமர்சனம் செய்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். மேலும் சிலர் ‘பாமக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கொள்கிறேன் . யார் மீதும் எந்த கோபமும் இல்லை இது எனது தனிப்பட்ட முடிவு ‘ பதிவு செய்து வருகின்றனர். இதனை தவிர பாஜக – பாமக கூட்டணியை விமர்சிக்கும் வகையில் பாமக தொண்டர்களே சிலர் மீம்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

The post பாஜக உடன் பாமக கூட்டணி: கட்சியில் இருந்து வரிசையாக விலகும் பாமக தொண்டர்கள்.! இணையதளத்தில் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: