பொன்னேரி அருகே பேருந்தை சிறை பிடித்து பெண்கள் சாலைமறியல்

பொன்னேரி: பொன்னேரி அருகே குடிநீர் வராததை கண்டித்து அரசுப் பேருந்தை சிறை பிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆவூர் ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், நேற்று காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த அரசுப் பேருந்தையும் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். கடந்த ஒரு மாதமாக விலை கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 நாட்களில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

 

The post பொன்னேரி அருகே பேருந்தை சிறை பிடித்து பெண்கள் சாலைமறியல் appeared first on Dinakaran.

Related Stories: