சிறைவாசிகளின் நலனுக்காக பார்வையாளர்கள் நியமனம்

 

புதுக்கோட்டை, மார்ச் 15: புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் பாஸ்டல் பள்ளியிலுள்ள சிறைவாசிகளின் நலன்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக 6 பேர் கொண்ட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநில சிறைத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. மருத்துவர். சலீம், இயற்கை விவசாயி ஜி.எஸ். தனபதி, ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, வைரவன், கோவிந்தராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்தப் பார்வையாளர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு இவர்கள் இப்பொறுப்பில் இருப்பார்கள். சிறை வளாகத்துக்குள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சென்று அனைத்து சிறைவாசிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறியவும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து பார்வையிடவும், தாங்கள் பார்த்த குறைகளை அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் எழுதவும் வேண்டும்.

பார்வையாளர்கள் எழுதியுள்ள குறிப்புகளுக்கு உரிய பதிலை சிறைக் கண்காணிப்பாளர்கள் எழுதி, அதுகுறித்த அறிக்கையை சிறைத்துறை தலைமையிடத்துக்கும் தெரிவிக்க வேண்டும் என சிறைத்துறை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சிறைவாசிகளின் நலனுக்காக பார்வையாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: