தமிழ்நாட்டில் மோடி டெபாசிட் வாங்கினால் பிரதமராக ஏற்கிறேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன் சவால்

ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதன் துவக்க விழா ஈரோடு அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிரதமர் மோடி இன்றைக்கு ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். எப்படியாவது தமிழ்நாட்டு மக்களை மயக்கி, அவர்களிடம் ஓட்டை பெற்று, பாஜ கட்சிக்கு தமிழ்நாட்டில் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து போய் கொண்டிருக்கிறார். உங்களுக்கு குடும்பம் இல்லையே என்று கேட்டால், நாட்டு மக்கள் தான் எங்கள் குடும்பம் என்று சொல்கிறார். நாட்டு மக்களை தன் குடும்பம் என சொல்லும் மோடிக்கு நான் சவால் விடுகிறேன்.

முடிந்தால், மோடி தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு டெபாசிட் வாங்கினால், பிரதமராக நான் ஏற்கிறேன். மோடி பேசுவதையும், மோடியை பற்றி மற்றவர்கள் பேசுவது பற்றியும் யாரும் நம்ப வேண்டாம். மோடியின் மொத்த உருவமே பித்தலாட்டம். தமிழ்நாட்டில் போதை கலாசாரம் அதிகம் உள்ளதாக கூறுவது என்பது, அந்த காலத்தில் அமைச்சராக இருந்த அரங்கசாமி காலத்தில் இருந்து இருக்கிறது. அப்போது அதிமுக தடுக்க தவறிவிட்டது. இப்போது நாம் நடவடிக்கை எடுப்பதால்தான், பல பேர் பிடிபட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், போதை பொருட்கள் எங்கிருந்து வருகிறது என பார்த்தால், அவை குஜராத்தில் இருந்தும், பிரதமரின் ஆத்ம நண்பரான அதானியின் துறைமுகத்தில் இருந்துதான் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. சிஏஏ சட்டத்தை ஏற்றினாலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, தூக்கி எறிவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் மோடி டெபாசிட் வாங்கினால் பிரதமராக ஏற்கிறேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன் சவால் appeared first on Dinakaran.

Related Stories: