மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி.. சிறை தண்டனையை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் வெளியீடு..!!

சென்னை : திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2001 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.

மேலும் அவர் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்து இருந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்றம் சட்ட விதிகளை முறையாக பின்பற்றவில்லை என கருத்து தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், எந்த நிபந்தனையும் குறிப்பிடவில்லை.

முன்னதாக சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் அவரது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் பொன்முடி எம்.எல்.ஏ. ஆகிறார். மேலும், தீர்ப்பு நகல் சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கப்பட்ட உடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படும்.

The post மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி.. சிறை தண்டனையை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: