பாகிஸ்தானின் 14வது அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவி ஏற்பு

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 8ம் தேதி நடந்த பொதுதேர்தலில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான 133 இடங்களை பெறவில்லை. இதையடுத்து நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களை வென்ற நிலையில், முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.

நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் பாகிஸ்தான் பிரதமரானார். இதனிடையே பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரியை பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் நிறுத்த இருகட்சிகளும் முடிவெடுத்தன. ஆசிப்புக்கு எதிராக இம்ரான் கான் கட்சி சார்பாக பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சி தலைவர் முகமது கான் அசாக் நிறுத்தப்பட்டார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி 255 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் பாகிஸ்தானின் 14வது அதிபராக ஆசிப் அலி சர்தாரி (68) நேற்று 2ம் முறையாக பதவி ஏற்று கொண்டார். இஸ்லாமாபாத்தில் அதிபர் மாளிகையான அய்வான்-இ-சத்ரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி காசி ஃபேஸ் இசா சர்தாரிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசு உயரதிகாரிகள் மற்றும் முப்படை தலைவர்கள் கலந்து கொண்டனர் ஆசிப் அலி சர்தாரிக்கு சீன பிரதமர் ஜீ ஜின்-பிங் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post பாகிஸ்தானின் 14வது அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: