நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மத்திய கூட்டுறவு வங்கி அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மத்திய கூட்டுறவு வங்கி அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட மக்களின் கோரிக்கை, விவசாயிகளின் நலன் கருதி புதிதாக மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கம்

நாமக்கல் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு 2 வருவாய் கோட்டங்கள். 8 வட்டங்கள். 30 வருவாய் பிர்க்காக்களுடன் (Firka) உருவாக்கப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை 17.26,601 ஆகும். 169 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட, பிற செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சங்கங்களையும் சேர்த்து மொத்தம் 816 சங்கங்கள் இம்மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில், நாமக்கல் மாவட்டம். கோழிப்பண்ணை, லாரி பாடி பில்டிங், முட்டை உற்பத்தி, ஆமணக்கு எண்ணெய் பதப்படுத்தும் தொழில் ஆகிய பல முக்கிய தொழில்களுக்கு பெயர் பெற்றதாகும். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்டத்தில் 45 கிளைகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 29 கிளைகள், என மொத்தம் 74 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 98.70 கோடி ரூபாய் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 55.15 கோடி ரூபாய் பங்குத்தொகையுடன் இவ்வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், 2020-21 ஆம் ஆண்டில் 22.17 கோடி ரூபாய். 2021-22 ஆம் ஆண்டில் 20.37 கோடி ரூபாய் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 18.24 கோடி ரூபாய் என தொடர்ந்து இலாபம் ஈட்டியுள்ளது.

சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டதிற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பயன்பெறும் வகையிலும், பல்வேறு சிறப்புகளை கொண்ட நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதற்கிணங்க இன்று (6.3.2024) நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

 

The post நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மத்திய கூட்டுறவு வங்கி அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: