2047ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: இலக்கு நிர்ணயித்த ஒன்றிய அமைச்சர்

புதுடெல்லி: வரும் 2047ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர் மதிப்புடன் முழு வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘நாட்டின் தற்போதைய 3.7 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை, வரும் 2047ம் ஆண்டுக்குள் 30 முதல் 35 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதும், நாட்டின் உணவு, எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதும் ஒன்றிய அரசின் லட்சியமாகும்.

கடந்த பத்தாண்டுகளில் நல்ல ஆளுமையுடன், ஏழைகளின் நலன் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற பிரதமர் மோடியின் முழுமையான தொலைநோக்குப் பார்வை, உலகின் 11வது பெரிய பொருளாதாரத்திலிருந்து, 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாற உதவியது. வரும் 2027ம் ஆண்டில் 3வது பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியாக இந்தியா உருவெடுக்கும்.

அந்நிய செலாவணி கையிருப்பில், கடந்த 2014ம் ஆண்டு முதல் 4வது மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. வளரும் நாடுகளின் நாணய மதிப்பில் இந்தியா சிறப்பாக செயல்படும் நாடுகளில் ஒன்றாகும்’ என்றார்.

The post 2047ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: இலக்கு நிர்ணயித்த ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: