மாசி பிரம்மோற்சவ விழாவில் தங்கமயில் வாகனத்தில் உலா வந்த முருகப்பெருமான்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

குன்றத்தூர்: குன்றத்தூர் முருகன் கோயில் பிரம்மோற்சவம் விழாவில், தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து சென்றனர். குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற வள்ளி – தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. ‘தென் தணிகை’ என்று போற்றப்படும் இக்கோயிலில், 400 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த 13ம் தேதி கிராம தேவதைகள் வழிபாடு மற்றும் பூஜைகளுடன் பிரம்மோற்சவம் விழா ஆரம்பமானது. கடந்த, 14ம் தேதி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து, நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

விழாவையொட்டி, வள்ளி – தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி காட்சியளித்தார். பின்னர், இரவு தங்க மயில் வாகனத்தில் சாமி வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தத்ரூபமாக தங்கத்தால் செய்யப்பட்டது போல் காட்சியளித்த மயிலின் மீது முருகன் அமர்ந்து முக்கிய தெருக்களின் வழியாக வீதிஉலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

10 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க உள்ளார். பின்னர், 19ம் தேதி மாலை 4 மணியளவில் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து வருகிற 21ம்தேதி காலை 9 மணியளவில் ரத உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

The post மாசி பிரம்மோற்சவ விழாவில் தங்கமயில் வாகனத்தில் உலா வந்த முருகப்பெருமான்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: