காவல்துறை குதிரையேற்ற போட்டிக்கு ரூ.5 லட்சம் நிதி: கமிஷனரிடம் அமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை: சென்னை காவல்துறை குதிரையேற்ற போட்டிக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரிடம் வழங்கினார். சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை குதிரைப்படை 1780ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகான ஆளுநர் வில்லியம் லாங்கன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் 1800ம் ஆண்டு முதல் இப்படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல் கண்காணிப்பாளர் வால்டர் கிராண்ட், சென்னை காவல்துறைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு 1926ம் ஆண்டு முதல் சென்னை காவல் குதிரைப்படை ஒரு சார்ஜன்ட் தலைமையில், ஒரு தனிப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு, சென்னை காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் பிறகு சென்னை காவல் குதிரைப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது, சென்னை பெருநகர காவல் குதிரைப்படை எழும்பூரில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல் துறை, குதிரைப்படை பிரிவை மேம்படுத்தவும், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முதல் குதிரையேற்ற போட்டியை வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நேற்று இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குதிரையேற்ற போட்டி ஏற்பாடுகளுக்காக சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரிடம் வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post காவல்துறை குதிரையேற்ற போட்டிக்கு ரூ.5 லட்சம் நிதி: கமிஷனரிடம் அமைச்சர் உதயநிதி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: