திருமலை திருப்பதி தேவஸ்தான தாச சாகித்ய திட்டத்தின் கீழ் புரந்தர தாசரின் ஆராதனை மஹோத்சவம் தொடங்கியது

*இன்று திறமையான கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது

திருமலை : திருமலை திருப்பதி தேவஸ்தான தாச சாகித்ய திட்டத்தின் கீழ் புரந்தர தாசரின் ஆராதனை மஹோத்சவம் தொடங்கியது. இதில் இன்று திறமையான இளம் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான தாச சாகித்ய திட்டத்தின் கீழ் வெங்கடேஸ்வர சுவாமியின் சிறந்த பக்தரும், கர்நாடக இசையின் தந்தையுமான புரந்தர தாசரின் ஆராதனை மஹோத்சவம் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெங்களூரு குக்கே சுப்ரமண்ய மடத்தின் மடாதிபதி வித்யாபிரசன்ன தீர்த்த சுவாமி சொற்பொழிவு ஆற்றினார்.

அதில் அவர் பேசியதாவது: மனித வாழ்க்கை என்பது பிரச்சனைகளின் வட்டம். இவற்றில் இருந்து விடுபட, பக்தி வழிகளில் நாமசங்கீர்த்தனத்தினை செய்வது நல்ல பலனை தரும். இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புரந்தர்தாசர் எழுதிய லட்சக்கணக்கான கீர்த்தனைகளைப் பாடி இறைவனின் அருளைப் பெறுகின்றனர் என்றார். தாச சாகித்தியத்தை அறிமுகப்படுத்திய பஜனை மண்டல உறுப்பினர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

இதைதொடர்ந்து தாச சாகித்திய திட்ட சிறப்பு அதிகாரி ஆனந்ததீர்த்தாச்சார்யுலு பேசுகையில், ‘4.75 லட்சம் சங்கீர்த்தனங்களை எழுதுவது தெய்வீக ஸ்வரூபமாகவும், நாரதரின் திருவுருவமாகவும் விளங்கிய புரந்தர்தாசரால் மட்டுமே சாத்தியம். புரந்தர்தாசரின் கீர்த்தனைகள் உலகளாவியவை. புரந்தர்தாசரின் வாழ்க்கை மனித குலத்திற்கு முன்னுதாரணமானது’ என்றார். பஜனை மண்டலியினரின் சுப்ரபாதம், தியானம், கூட்டு பஜனை, நகர சங்கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்நிகழ்ச்சியில் பஜனை மண்டல உறுப்பினர்களால் பல தாச சங்கீர்த்தனங்கள் பாடினர். இரண்டாம் நாளான இன்று இசை, இலக்கியத் துறைகளில் திறமையான இளம் கலைஞர்களுக்குத் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவ மூர்த்திகள் திருமலை நாராயணகிரி தோட்டத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு புரந்தரதாசர் சங்கீர்த்தனங்கள் மேளதாளங்கள் முழங்க நடைபெறும். தாச சாகித்திய திட்ட சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சாரியுலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 3,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஜனை மண்டலி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

The post திருமலை திருப்பதி தேவஸ்தான தாச சாகித்ய திட்டத்தின் கீழ் புரந்தர தாசரின் ஆராதனை மஹோத்சவம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: