பிப்.9ம் தேதி முதல் 19ம்தேதி வரை காஞ்சிபுரத்தில் புத்தக திருவிழா

 

காஞ்சிபுரம், ஜன.31: காஞ்சிபுரம் அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் பிப்.9ம்தேதி முதல் 19ம்தேதி வரை காஞ்சிபுரம் புத்தக திருவிழா-2024 நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், ‘காஞ்சிபுரம் புத்தக திருவிழா-2024’ என்ற தலைப்பில் பிப்ரவரி 9ம்தேதி முதல் 19ம்தேதி வரை நடைபெறவுள்ளது.

இப்புத்தக திருவிழா-2024, 2வது மாபெரும் புத்தக திருவிழாவாகும். இப்புத்தக திருவிழாவில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினரால் 100 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது. இம்முறை குழந்தைகளுக்கான அரங்குகள் மற்றும் மாணவர்களுக்கான சம்மந்தமாக உள்ள புத்தக அரங்குகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் வாசிக்கும் திறனை மேம்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் தினம்தோறும் அரங்கிற்குள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிந்தனை தூண்டும் பேச்சாளர்கள், திறனை மேம்படுத்த வழிகாட்டும் பேச்சாளர்கள், சிந்திக்க வைக்கும் பட்டிமன்றங்கள், மனதை மகிழ்விக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், புத்தக நன்கொடை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதோடு, தினம்தோறும் 5 நபர்களுக்கு புத்தக பரிசு குலுக்கள் முறையில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்பினை அளித்து, புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post பிப்.9ம் தேதி முதல் 19ம்தேதி வரை காஞ்சிபுரத்தில் புத்தக திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: