சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது” பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுப. வீரபாண்டியன் அவர்கள், திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர், தந்தை பெரியாரின் பற்றாளர். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். அவர் ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை முன்வைத்து, 2007 ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அவர், கல்லூரியில் பணியாற்றும் பொழுதே தமிழ் தமிழர் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டவர்.
தந்தை பெரியாரின் கொள்கைகளான சமூக நீதி, சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு. தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை மற்றும் பகுத்தறிவு முதலான கருத்துகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். சுப. வீரபாண்டியன் அவர்கள் கலைமாமணி விருது பெற்றுள்ளதுடன், இதுவரை 54 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுப.வீரபாண்டியனுக்கு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கினார். விருதுடன் ரூ.5 லட்சம் தொகை மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. தொடர்ந்து
அம்பேத்கர் விருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.சண்முகத்திற்கு வழங்கினார். 2023ம் ஆண்டுக்கான “பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவம் அவர்களுக்கு விருதினை முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.
The post சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.