ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை..!!

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே.சுரேஷ், பாஜக நிர்வாகி ஹரீஷ் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாகி இருந்தனர்.

இந்நிறுவனத்துடன் தொடர்புடைய 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பாஸ்கர், மோகன் பாபு, செந்தில் குமார், நாகராஜன், பேச்சி முத்துராஜா, நடிகர் ரூஸோ உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளனர். மொத்தம் 61 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.6.35 கோடி ரொக்கம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தவிர வங்கிக் கணக்கில் இருந்த ரூ.96 கோடி முதலீடு, ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டன.

இதற்கிடையே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விளக்கம் கேட்டு 6 முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் தலைமறைவான நிலையில் அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில் 2 நாள் முன்பு துபாயில் இருந்து சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் இன்று ஆஜரானார். அவரிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.

The post ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: