இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள், மீன்பிடி படகுகளை மீட்க தேவையான தூதரக நடவடிக்கை: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: IND-TN-06-MM-7675 பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 12 மீனவர்களும், IND-PY-PK-MM-1499 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 13 மீனவர்களும், கடந்த 9ம் தேதி அன்று இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் கவலை அளிக்கிறது.

அதோடு, IND-TN-10-MM-558 என்ற பதிவெண் கொண்ட மற்றொரு மீன்பிடி படகு இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது, நமது மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க உரிய நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள், மீன்பிடி படகுகளை மீட்க தேவையான தூதரக நடவடிக்கை: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: