நிவாரணத்துக்கு முதல்வர் கேட்ட ரூ.5000 கோடியை உடனே வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு காதர் மொய்தீன் வலியுறுத்தல்

சேலம்: சேலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், இந்தியா முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 31ம் தேதிக்குள், இந்தியா முழுமையாக நிறைவு பெற்று, ஜனவரி மாதம் தேசிய பொதுகுழு கூடி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க உள்ளோம். விரைவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அலுவலகம், டெல்லியில் திறக்கப்பட உள்ளது. அதற்கு இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களை அழைக்க உள்ளோம். இயற்கை பேரிடர் என்பது தவிர்க்க முடியாது. தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக செய்து வருகிறது.

புயல்வெள்ளம் பாதிப்பு எற்பட்ட பகுதிகளை, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் நேரில் வந்து பார்த்து, தமிழகத்திற்கு உதவிகளை செய்வதாக முதல்வரை சந்தித்து தெரிவித்தது மிகுந்த வரவேற்புக்குரியது. அதே வேளையில், வெள்ள பாதிப்பு நிவாரணமாக தமிழக முதல்வர் கேட்ட ரூ.5000 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும். நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றதேர்தலில், 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் காங்கிரஸ் கட்சியை விட வாக்குகள் குறைந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

The post நிவாரணத்துக்கு முதல்வர் கேட்ட ரூ.5000 கோடியை உடனே வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு காதர் மொய்தீன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: