விவசாய நிலத்தில் கிடந்த ராக்கெட் லாஞ்சர் மீட்பு

சென்னை, டிச.2: பெரியபாளையம் அருகே உள்ள விவசாய நிலத்தில், ராணுவத்தினர் பயன்படுத்திய ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அடுத்த வேம்பேடு கிராமத்தில் உள்ள சொர்க்கபுரி பகுதியில், தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (45) என்பவர், ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வித்தியாசமான ஒரு பொருள் மண்ணில் புதைந்து இருந்துள்ளது. இதுகுறித்து, மெய்யூர் விஏஒ அதிசயராஜிக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, அந்த பொருள் ராணுவத்தினர் பயன்படுத்திய குண்டு என தெரிந்தது. பின்னர் விஏஒ, பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், அந்த இரும்பு குண்டை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்த இரும்பு குண்டு சுமார் 1.5 அடி நீளமுள்ள ராணுவத்தினர் பயன்படுத்தும் ராக்கெட் லாஞ்சர் என தெரிய வந்தது. அதனை பரிசோதிக்க வெடிகுண்டு நிபுணர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வரும் வரை அந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post விவசாய நிலத்தில் கிடந்த ராக்கெட் லாஞ்சர் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: