எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், “ கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.

இதை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு,அதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்து அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்த மேல் முறையீட்டையும் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நேற்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்னா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத் கண்ணா, இது முக்கியமான வழக்கு என்பதால் ஒத்திவைக்காமல் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கிறது. இருப்பினும் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற கடிதத்தை நிராகரிக்க முடியாது. அது நீதிமன்றத்தின் மரபாகும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: