மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

சேந்தமங்கலம், நவ.23: புதுச்சத்திரம் அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் இமயதாண்டவ பூபதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் சந்திரசேகரன், முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 86 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். அரசு எலும்பு முறிவு மருத்துவர் மணிகண்டன் தலைமையில் மருத்துவக்குழுவினர், அவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள், மருத்துவ ஆலோசனைகள், உடற்பயிற்சிகள் குறித்து எடுத்துரைத்தனர். இம்முகாமில், 11 குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, 12 குழந்தைகளுக்கு மறுமதிப்பீடு அடையாள அட்டை, 11 குழந்தைகளுக்கு இலவச பஸ் பாஸ், 8 குழந்தைகளுக்கு உபகரணங்கள், 13 குழந்தைகளுக்கு இலவச காப்பீடு செய்து கொடுக்கப்பட்டது. முகாமை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர் பயிற்றுநர் செல்வராணி நன்றி கூறினார்.

The post மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: