இதில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: திமுக இளைஞர் அணியின் மாநில மாநாடு 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாடு, நம் இளைஞர் அணியின் பெருமையை, திமுகவின் கட்டமைப்பை இந்திய ஒன்றியமே உணர்ந்து கொள்ளும் வகையில் நடைபெற இருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடும் நம் இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எந்தளவுக்கு நேர்த்தியாக திட்டமிடப்பட வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். மாநாட்டுக்கான பணிகளை நாம் அனைவரும் இணைந்து தான் செய்யப் போகிறோம்.
இந்த மாநாட்டை நடத்துவதற்கு நமக்கு மிகப்பெரிய பலமாக முதன்மைச் செயலாளர் நேரு உள்ளார். பல மாநாட்டை நடத்திய அனுபவம் அவருக்கு உள்ளது. இதில் நாம் என்ன தவறு செய்வோம் என பலர் காத்திருக்கிறார்கள். அதனால் விமர்சனத்துக்கு இடமளிக்காமல், இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தலைமைக் கழகமே மாநில மாநாட்டையோ, மண்டல மாநாட்டையோ நடத்துவது வழக்கம். ஆனால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மாநாட்டை நடத்தும் மிகப்பெரிய வாய்ப்பை, பொறுப்பை நம் தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணிக்கு வழங்கியுள்ளார். தலைவர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நம் செயலின் மூலம் நிரூபிக்க வேண்டியது நம் கடமை.
The post இளைஞர் அணியின் பெருமையை நாடே உணரும் வகையில் சேலம் மாநாட்டை நடத்தி காட்டுவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.