சூளை பகுதியில் நள்ளிரவு பரபரப்பு; ரோந்து பணியில் இருந்த பெண் எஸ்ஐயை ஆபாசமாக பேசி மிரட்டிய ரவுடி: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்


சென்னை: சூளை பகுதியில் நள்ளிரவு ரோந்து பணியில் இருந்த பெண் எஸ்ஐயிடம் ரவுடி ஒருவர் குடிபோதையில் தகராறு செய்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னையில் இரவு நேரங்களில் குற்றங்களை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி அனைத்து காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் கவுரி நேற்று இரவு பணி என்பதால் வேப்பேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, சூளை பகுதியை சேர்ந்த ‘பி’கேட்டகிரி ரவுடியான கிஷோர்(எ)கால்வாய் கிஷோர்(28) கஞ்சா போதையில் சாலையில் செல்லும் பொதுமக்களை தொந்தரவு செய்வதாக உதவி ஆய்வாளர் கவுரிக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உதவி ஆய்வாளர் கவுரி தகராறு நடக்கும் சூளை பகுதிக்கு வந்தார். அப்போது ரவுடி கிஷோர் ‘பெண் உதவி ஆய்வாளர் என்று பாராமல் அவரை ஆபாசமாக பேசி, நான் அப்படி தான் செய்வேன். ஒவ்வொரு ஆளாக வரசொல்லு நான் சண்டை செய்கிறேன்’ கும்பலாக 5 பேர் வரகூடாது என கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.  ஒரு கட்டத்தில் நிலைமையை உணர்ந்து உதவி ஆய்வாளர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்தை குடியிருப்பு வீட்டில் இருந்து ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைதொடர்ந்து வேப்பேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கவுரி அளித்த புகாரின் படி கஞ்சா போதையில் இருந்த ரவுடி கிஷோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதிகளவில் கஞ்சா போதையில் இருந்ததால் அவனிடம் விசாரணை நடத்த முடியாத நிலை இருந்தது. அதைதொடர்ந்து போலீசார் இன்று காலை மீண்டும் ரவுடி கிஷோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சூளை பகுதியில் நள்ளிரவு பரபரப்பு; ரோந்து பணியில் இருந்த பெண் எஸ்ஐயை ஆபாசமாக பேசி மிரட்டிய ரவுடி: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: