வேலூரில் திருட முயன்ற 2 பைக் ஆசாமிகள் கைது தப்பியோடிய 4 பேருக்கு வலை

வேலூர், நவ.10: வேலூரில் திருட முயன்ற சென்னையைச் சேர்ந்த 2 பைக் ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 4 போலீசார் தேடி வருகின்றனர். விரிஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பொய்கை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, சமத்துவபுரம் சமுதாய கூடம் அருகில், சந்தேகம்படும்படி 2 பைக்கில் 6 நபர்கள் சுற்றி வந்துள்ளனர். அவர்கள் போலீசாரை கண்டதும் பைக்கில் தப்பியோட முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடிக்க ஜீப்பில் தூரத்தி சென்று, ஒரு பைக்கை மடக்கி அதிலிருந்த 2 பேரை பிடித்தனர். மற்றொரு பைக்கில் 4 தப்பியோடி விட்டனர். பிடிப்பட்ட 2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய் இம்மானுவேல்(23), சென்னை நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ்(20) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள், குழுவாக சேர்ந்து, தீபாவளி பண்டிகை செலவுக்கு வேலூர் மற்றும் அதன் சுற்றப்புற பகுதியில் வழிப்பறி மற்றும் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. அதேநேரம், அவர்கள் ஓட்டிவந்த பைக் வில்லிவாக்கம் பகுதியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து பைக், 2 கத்தி, இரும்புராடு, கயிறு, மிளகாய் பொடி உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post வேலூரில் திருட முயன்ற 2 பைக் ஆசாமிகள் கைது தப்பியோடிய 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: