மேகாலயா தலைமை நீதிபதியாக சென்னை ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் நியமனம்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

நாட்டில் பெரிய உயர் நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைப்பதாக கொலிஜியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1986ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை துவங்கிய நீதிபதி எஸ்.வைத்தியநாதன், 2013ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார்.

2015 ஏப்ரல் 14ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் நீதிபதி வைத்தியநாதன், 1,219 முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் மூத்த நீதிபதியாக வைத்தியநாதன் இருந்து வருகிறார்.

The post மேகாலயா தலைமை நீதிபதியாக சென்னை ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் நியமனம்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: