திருநெல்வேலியில் மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதி பெயரைகேட்டு பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக தச்சநல்லூரைச் சேர்ந்த 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி பணம் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது வன்கொடுமை, வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த பட்டியலின இளைஞர்கள் மனோஜ், மாரியப்பன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகையில், 6 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி சாதி பெயரை கேட்டு துன்புறுத்தினர். சட்டையை கழற்றி எங்கள் மீது சிறுநீர் கழித்தனர். கஞ்சா போதையில் இருந்தவர்கள் எங்களை கடுமையாக தாக்கினர். பின்னர் தப்பித்து ஆடை இல்லாமல் வீட்டிற்கு ஓடி வந்தோம். ரூ.5,000 பணம், செல்போன், வெள்ளி சங்கிலி ஆகியவற்றை பறித்து சென்றனர் எனவும் கூறியுள்ளார்.
The post நெல்லை மாவட்டத்தில் கஞ்சா போதையில் 2 பட்டியலின இளைஞர்களை தாக்கிய 6 பேர் கைது appeared first on Dinakaran.