தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல இதுவரை 70,000 பேர் முன்பதிவு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். அதன்படி, பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை தரப்பில் வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு செல்ல 10,975 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்ல 5,920 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 16,895 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் நேரடியாக டிக்கெட்டுகளை கோயம்பேடு மற்றும் தாம்பரம் சானடோரியத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 மையங்களிலும், ஆன்லைன் மூலமாக போக்குவரத்து துறையால் வெளியிடப்பட்டுள்ள இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இதற்கான பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது வரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். இதில், சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் 46 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் பயணிப்பார்கள் என அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல இதுவரை 70,000 பேர் முன்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: