கடன் வசூல் தீர்ப்பாயங்களின் காலியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கை என்ன?: ஒன்றிய நிதித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: திருச்சியைச் சேர்ந்த தனபாலன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தொழில் காரணங்களுக்காக திருச்சி அரசுடமை வங்கியில் ரூ. 1.7 கோடி கடன் வாங்கினேன். கடனை முறையாக திருப்பி செலுத்தவில்லை எனக்கூறி, எனது சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான அறிவிப்பை வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இதுபோல், ஐகோர்ட் மதுரை கிளை எல்லைக்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில், வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால், வாகனம், வீடு, சொத்துக்கள் உள்ளிட்டவற்றை ஏலம் விடுவதாக அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரிய பல்வேறு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், மதுரையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்குகளை விசாரிக்க தீர்ப்பாய அதிகாரி இல்லாததால், கேரள மாநிலம் எர்ணாகுளம் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் முறையிட்டு நிவாரணம் பெற அறிவுறுத்தப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனுவின் மீது நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சுந்தர்மோகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் ஒன்றிய நிதித்துறை செயலர், எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். கடன் வசூல் தீர்ப்பாய அலுவலர் விடுப்பில் சென்றால், அவரின் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான மாற்று வழிகளை முடிவு செய்வதில் ஒன்றிய அரசு கவனம் கொள்ள வேண்டும். கடன் தீர்ப்பாயங்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. தமிழ்நாட்டில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்களில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து, ஒன்றிய நிதித்துறை செயலர் தரப்பில் அறிக்கையளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

 

The post கடன் வசூல் தீர்ப்பாயங்களின் காலியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கை என்ன?: ஒன்றிய நிதித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: