மானாம்பதி குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்: மானாம்பதி கிராமத்தில் இடமாற்றம் செய்யப்படும் டாஸ்மாக் கடை குடியிருப்பு பகுதியில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் புகார் மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை, மானாம்பதி கிராம மக்கள் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது: மானாம்பதி கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக டாஸ்மாக் கடை இருந்தது. பொதுமக்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட சுய உதவி குழுவினரின் தொடர் போராட்டங்களால் மாவட்ட கலெக்டர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தலையிட்டு, டாஸ்மாக் கடை இங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் பெருநகர் பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்படும் டாஸ்மாக் கடை மானாம்பதி கிராமத்தில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மானாம்பதி கிராமத்தில் மாநில நெடுஞ்சாலை பகுதியில் மசூதி, கால்நடை மருத்துவமனை, மருந்தகம், எஸ்டி மக்கள் வசிக்கும் குடியிருப்பு உள்ள இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடைபெறுவதாக தெரிகிறது.

இந்த பகுதி வழியாக தண்டரை, சேர்ப்பாக்கம், ஆலத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு. இந்த பகுதியை கடந்துதான் மாணவ – மாணவிகள் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மானாம்பதி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மானாம்பதி குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: