காதல் மனைவியின் பல் உடைப்பு கணவன் கைது வந்தவாசியில் குடும்ப தகராறு

வந்தவாசி, அக்.10: வந்தவாசியில் குடும்ப தகராறில் காதல் மனைவியை சரமாரியாக தாக்கி பல் உடைத்த கணவனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் செல்வி(28). இவரும் தெய்யார் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ்(33) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. செல்வி எஸ்.நாவல் பாக்கம் அங்கன்வாடி மையத்தில் வேலை செய்து வருகிறார். சத்யராஜ் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். செல்வி, கஜலட்சுமி நகரில் உள்ள வாடகை வீட்டில் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். கடந்த 5ம் தேதி அன்று வீட்டில் இருந்த செல்வி செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த சத்யராஜ் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய்? என கேட்டு வீண் தகராறு செய்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பல் உடைந்து, முகத்தில் காயமடைந்த செல்வி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து செல்வி வந்தவாசி தெற்கு போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாபு வழக்கு பதிவு செய்து சத்யராஜ் கைது செய்தார்.

The post காதல் மனைவியின் பல் உடைப்பு கணவன் கைது வந்தவாசியில் குடும்ப தகராறு appeared first on Dinakaran.

Related Stories: