விடையூர் கிராமத்தில் நெல் அறுவடை இயந்திரத்தில் ரோலர் இரும்பு திருட முயற்சி: 3 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட விடையூர் ஆச்சாரி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் தேவா(23). இவர் இரண்டு நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று 8ம் தேதி அதிகாலை வீட்டின் வெளியே சத்தம் கேட்டதால் எழுந்து வந்து பார்த்த போது 3 அடையாளம் தெரியாத நபர்கள் அறுவடை இயந்திரத்தில் இருந்து ரோலர் இரும்பை கழற்றிக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து தேவா, அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஏழுமலை, மீனாட்சி, சரவணன், நந்தகுமார் ஆகிய 4 பேருக்கு விரைந்து தகவல் கொடுத்து 5 பேரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயற்சித்தனர்.
இதையறிந்த அந்த 3 பேரும் தப்பி ஓட முயற்சித்தனர். அதில் ஒருவன் மட்டும் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால் அவனைப் பிடித்து விசாரித்ததில் அவன் நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்த நேரு மகன் ஜெகன்(20) என்பது தெரியவந்தது. அவனிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் இவனுடன் வந்தது பட்டரைப்பெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் (எ) அப்பு(19) மற்றும் ஏழுமலை மகன் பெருமாள் (எ) ஆதி(18) என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து கீழே விழுந்து காயம் அடைந்த ஜெகனை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்து 3 பேரையும் பிடித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தாலுகா போலீசார் அறுவடை இந்திரத்தில் இருந்து இரும்பு ரோலரை திருட முயன்றதாக 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

The post விடையூர் கிராமத்தில் நெல் அறுவடை இயந்திரத்தில் ரோலர் இரும்பு திருட முயற்சி: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: