கூகுள் மேப் பார்த்து ஓட்டியதால் ஆற்றில் கார் கவிழ்ந்து 2 டாக்டர்கள் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அத்வைத், அஜ்மல் என்ற 2 டாக்டர்கள் உள்பட 5 பேர் நேற்றுமுன்தினம் கொச்சியில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றனர். பின்னர் இரவு விருந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு அனைவரும் கொடுங்கல்லூருக்கு புறப்பட்டனர். காரை டாக்டர் அஜ்மல் ஓட்டினார். சரியாக வழி தெரியாததால் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை சுமார் 12.30 மணி அளவில் கார் கொச்சி கடுவாத்துருத்து ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக திசை மாறி கார் ஆற்றில் விழுந்தது. அப்போது காரின் கதவுகள் திறந்ததால் அனைவரும் ஆற்றில் விழுந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்றுகொண்டிருந்தவர்கள் சிலர் கார் ஆற்றில் விழுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஆற்றில் குதித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மருத்துவ மாணவி உள்பட 3 பேர் மீட்கப்பட்டனர். பலியான 2 பேரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட 3 பேரும் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூகுள் மேப்பில் திசை மாறியதும், பலத்த மழை காரணமாக சரியாக ரோட்டை பார்க்க முடியாததும் தான் விபத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

The post கூகுள் மேப் பார்த்து ஓட்டியதால் ஆற்றில் கார் கவிழ்ந்து 2 டாக்டர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: