முந்நீர் விழா என்பது சங்ககாலத்தில் நடைபெற்ற விழாக்களில் ஒன்றாக விளங்கியிருந்துள்ளது. பூமியை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையுடையது. கடலில் பொழிந்து கடல் வளத்தைப் பெருக்கும் மழைநீர், ஆறு அடித்துக்கொண்டு வரும் மழைநீர், மண்ணிலிருந்து ஊறிவரும் ஊற்றுநீர் ஆகிய மூன்று நீரும் கலந்தது. இதனை, ‘இரும் பனையின் குரும்பை நீரும், பூங் கரும்பின் தீம் சாறும், ஓங்கு மணல் குவவுத் தாழைத் தீம் நீரொடு உடன் விராஅய், முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்’ என்று புறநானூறு கூறுகிறது.
மூன்று வகையான பருகும் நீரை ஒன்றாகக் கலந்து, உண்ணும் பழக்கம் சங்ககால தமிழக மக்களிடையே இருந்து வந்தது. இந்த கலவை நீரை முந்நீர் என்றனர். அந்த வகையில், மறைந்துபோன, சங்ககால மக்கள் நடத்திய விழாவினை, மீண்டும் கொண்டு வந்து தமிழர்களின் பண்பாடுகளை நினைவூட்டும் வகையில் மழை நீர், ஆற்று நீர், ஊற்று நீர் ஆகியவற்றை மூன்று கலசத்தில் சேகரித்து, காஞ்சிபுரம் – வந்தவாசியில் நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்திற்கு தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள நட்சத்திர விருச்ச விநாயகர் கோயிலில் விருட்ச விநாயகருக்கும் மற்றும் முந்நீர் கடவுளாக விளங்கும் விஷ்ணு பகவானுக்கு முந்நீர் கலசபிஷேகம், மகா தீப ஆராதனைகள் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
The post காஞ்சிபுரம் அருகே நட்சத்திர விருட்ச விநாயகருக்கு முந்நீர் அபிஷேகம்: பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.