இந்நிலையில் இடைத்தரகர்கள் மற்றும் வெளி வியாபாரிகள் தலையீடு ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, எந்த ஒரு விவசாயியும் தன்னுடைய அடங்கல் சான்றிதழை இடைத்தரகர்கள் மற்றும் வெளி வியாபாரிகளிடம் வழங்கியது உறுதி செய்யப்படின், அந்த விவசாயிக்கு 2 வருடங்களுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய அனுமதி மறுத்து, அரசு வழங்கும் எந்தவொரு மானியத் திட்டங்களும் வழங்கப்பட மாட்டாது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலையீடு செய்யும் இடைத்தரகர்கள் மற்றும் வெளிவியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும் என நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து நெல் எடுத்து வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலைய செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
* நனையாமல் பாதுகாக்க உத்தரவு
இதேபோல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகள் மழையில் நனையாத வண்ணம் பாதுகாக்க ஏதுவாக தார்பாய்கள் வழங்கவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை சேமிப்பு கிடங்குகள் மற்றும் அரவை மையங்களுக்கு மாற்றம் செய்து மழையில் நனையாமல் பாதுகாப்பாக சேமித்து வைக்கவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
The post நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் தலையீடு இருக்கக்கூடாது: அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.
