செய்யாறு, செப்.24: செய்யாறு அருகே முன்விரோத தகராறில் பாஸ்ட் புட் கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கி மண்டை உடைத்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். செய்யாறு அடுத்த நமண்டி கிராமத்தை சேர்ந்தவர் அசோகன்(45), தொழிலாளி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சக்கரபாணி, சுரேஷ் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி அரிஹரப்பாக்கம் கிராமத்தில் உள்ள பாஸ்ட்புட் கடையில் அசோகன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சக்கரபாணி, சுரேஷ் ஆகியோர், அசோகனிடம் தகராறு செய்துள்ளனர்.
மேலும் ஆத்திரமடைந்த சக்கரபாணி, சுரேஷ் ஆகியோர் அசோகனை ஆபாசமாக பேசி, கையில் வைத்திருந்த பீர்பாட்டிலால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். அதோடு சுரேஷ் கடப்பா கல்லாலும் அசோகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இருவரும் தப்பி சென்ற நிலையில், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அசோகனை அப்பகுதியினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அசோகனின் மனைவி மைதிலி நேற்று முன்தினம் தூசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து சக்கரபாணி, சுரேஷ் ஆகியோரை வலை வீசி தேடி வருகிறார்.
The post பாஸ்ட் புட் கடையில் சாப்பிட்ட தொழிலாளி மண்டை உடைப்பு: பீர்பாட்டிலால் தாக்கிய 2 பேருக்கு வலை செய்யாறு அருகே முன்விரோத தகராறு appeared first on Dinakaran.