போளூர், செப்.20: போளூர் அருகே மின்சாரம் தாக்கியதில் காதலித்து மணந்த கர்ப்பிணி நர்ஸ் பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பொத்தரை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(25) கூலி தொழிலாளி. இவரது மனைவி வினோதினி(23). இருவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். வினோதினி போளூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். தற்போது வினோதினி 8 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வினோதினி வீட்டில் குளிப்பதற்காக புதிதாக வாங்கிய வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் வினோதினி தூக்கிவீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து வினோதினியின் தந்தை ஏழுமலை போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி கர்ப்பிணி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post மின்சாரம் தாக்கி கர்ப்பிணி நர்ஸ் பலி போலீசார் விசாரணை போளூர் அருகே காதலித்து மணந்தவர்கள் appeared first on Dinakaran.