புதன்சந்தைக்கு மாடுகள் வரத்து சரிவு

சேந்தமங்கலம், செப்.20: தொடர் மழை, வடமாநில மாடுகள் அதிக அளவில் கேரளாவில் இறக்குமதி ஆவதால், புதன்சந்தையில் நேற்று மாடுகள் வரத்து குறைந்து, விலையும் சரிந்தது. ₹1.80 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கட் கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெறும். சந்தையில் மாடுகளை வாங்க, விற்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் வருவார்கள். இரண்டு நாட்களில் கோடிக் கணக்கில் வர்த்தகம் நடைபெறும்.

நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு மாடுகள் குறைந்த அளவில் வந்திருந்தது. மாடுகளை வாங்க வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வரவில்லை. கேரளாவுக்கு மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து நேரடியாக அதிக அளவில் மாடுகள் இறக்குமதி செய்யப்படுவதால், தொடர் மழை காரணமாக அங்கிருந்து வியாபாரிகள் மாடுகளை வாங்க வரவில்லை. இதனால் புதன்சந்தையில் மாடுகள் விலை குறைந்தது. இறைச்சி மாடுகள் ₹23 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ₹45 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ₹16 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஒட்டு மொத்தமாக ₹1.80 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post புதன்சந்தைக்கு மாடுகள் வரத்து சரிவு appeared first on Dinakaran.

Related Stories: