சிங்கப்பூர் சென்ற தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்

சென்னை: அரசுப் பள்ளிகளில் நடந்த போட்டிகளில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு சிங்கப்பூர் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள் நேற்று சென்னை திரும்பினர். தமிழ்நாடு அரசின் அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட போட்டிகளில் தேர்வான 25 மாணவ-மாணவியர் செப்டம்பர் முதல் வாரத்தில் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் கல்வி அதிகாரிகள், தலா ஒரு உதவியாளரும் சென்றனர். அந்த குழுவினருடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியும் சென்றார்.

கடந்த நான்கு நாட்களாக இந்த குழுவினர் சிங்கப்பூரில் பல்வேறு இடங்களை நேரில் சென்று பார்த்தனர். சிங்கப்பூரின் பள்ளிகள், கல்வி நிலை, பள்ளிகள் செயல்படும் விதம், கற்பிக்கும் முறைகள் குறித்தும் தமிழ்நாட்டு மாணவ மாணவியர் நேரில் பார்வையிட்டனர். மேலும், சில மனமகிழ் இடங்களுக்கும் சென்றனர். இந்த சுற்றுலா நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நேற்று அவர்கள் விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்பினர். அவர்களை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர்.

அப்போது, தாங்கள் சிங்கப்பூரில் பார்த்த இடங்கள் பற்றியும், கல்வி நிலைகள் குறித்தும் இயக்குநரிடம் தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். அந்த மாணவ மாணவியருக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி புத்தகங்களை பரிசாக கொடுத்து வாழ்த்தினார்.

The post சிங்கப்பூர் சென்ற தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர் appeared first on Dinakaran.

Related Stories: