காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்; இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது நிச்சயம்: சுந்தர் எம்எல்ஏ பேச்சு

மதுராந்தகம்: உத்திரமேரூரில் நடந்த காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், ‘இந்தியா கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது நிச்சயம்’ என பேசினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உத்திரமேரூரில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் இனியஅரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் டி.வி.கோகுலக்கண்ணன், மலர்விழி குமார், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ அனைவரையும் வரவேற்றார். பின்னர், அவர் பேசியதாவது: ‘வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். அதில், திமுகவினர் பெயர் விடுபட்டிருந்தால் வாக்காளர்களை சேர்ப்பது, புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட பணிகளை நிர்வாகிகள் செய்து முடிக்க வேண்டும். மோடி எதிர்ப்பலை தொடர்ந்து 5 ஆண்டு காலமாக இருந்து வருகிறது. ஆகவே தான் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தலைவர் மு.க.ஸ்டாலின் யாரை பிரதமர் என்று சொல்கிறாரோ அவர்தான் பிரதமராக உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் வருகிற 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழா, அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அனைவரும் ஆரவாரத்துடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இவர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழியெங்கும் திரளாக திரண்டு நின்று வரவேற்பு அளிப்பதெனவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி தமிழ்நாடு மகளிர் மனதில் இடம் பிடித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சி தெற்கு மாவட்ட கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை வழங்கி வரலாற்றில் இடம் பிடித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் மாவட்ட கழகம் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக மோசடி ஆட்சியில் இருந்து இந்தியாவை காப்பாற்றுகின்ற இந்தியா கூட்டணி உருவாக்குகின்ற முயற்சியில் பெரிதும் ஈடுபட்டு பாட்னா, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில், இந்தியா கூட்டணி நல்ல முன்னெடுப்பில் செல்வதற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக வழி நடத்துவதற்கு கழகத் தலைவருக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், செயற்குழு உறுப்பினர்கள் நாகன், நாராயணன், சுகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, சசிகுமார், ராஜேந்திரன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன், குமார், சேகர், குமணன், கண்ணன், தம்பு, சத்திய சாய், பென்.சிவக்குமார், ராமச்சந்திரன், ஏழுமலை, சரவணன், சிற்றரசு, பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாணவரணி அமைப்பாளர் டைகர் குணா, பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன், சுந்தரமூர்த்தி, எழிலரசன், செங்கல்பட்டு மாவட்ட, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ராஜா ராமகிருஷ்ணன், ஜெயலட்சுமி மகேந்திரன், மாலதி செல்வராஜ், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், மீனவர் அணி அமைப்பாளர் பாரத் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் ஒன்றிய, பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் சுப்பராயன், பேரூர் அவைத்தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்; இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது நிச்சயம்: சுந்தர் எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: