மலேசிய சர்வதேச சிலம்பம் போட்டியில் 2ம் இடம்: சென்னை விமான நிலையத்தில் தமிழக வீரர்களுக்கு வரவேற்பு

சென்னை: மலேசியாவில் நடந்த சர்வதேச சிலம்பம் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக மாணவ, மாணவிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசியாவின் போர்க்கலை சிலம்பம் என்ற அமைப்பு சர்வதேச அளவில் சிலம்பம் விளையாட்டு போட்டிகளை நடத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த போட்டியில், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா உள்பட 14 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிலம்ப விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மாணவிகள், 19 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் மாணவர்களுக்கு தனித்திறமை, மற்றும் தொடுமுறை என்ற இரு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழக மாணவ, மாணவிகள் 19 தங்க பதக்கங்கள், 18 வெள்ளி பதக்கங்கள், 17 வெண்கல பதக்கங்களை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தனர். போட்டிகளின் முடிவில் மலேசியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி முதலிடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. இந்த சிலம்பம் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட தமிழக மாணவ, மாணவிகள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது மாணவ, மாணவிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு அரசு தற்போது விளையாட்டுப் பிரிவுக்கு 3% இட ஒதுக்கீடு அளித்துள்ளது. அதை 5% ஆக அதிகரிக்க வேண்டும். மேலும் சிலம்பம் வெளிநாட்டில் இருந்து வந்த விளையாட்டு அல்ல நமது இந்திய விளையாட்டு. அதிலும் தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் உள்ள பாரம்பரிய விளையாட்டு. அதை மேலும் ஊக்குவிக்க, அரசு பள்ளிகளில் சிலம்பம் விளையாட்டை கட்டாயம் ஆக்க வேண்டும் என்றனர்.

The post மலேசிய சர்வதேச சிலம்பம் போட்டியில் 2ம் இடம்: சென்னை விமான நிலையத்தில் தமிழக வீரர்களுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: