கூட்டுறவு வங்கியில் ரூ300 கோடி மோசடி; கேரள மாஜி அமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: 31ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் இடதுசாரி கூட்டணி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மொய்தீன். குன்னம்குளம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏவாக உள்ளார். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் ரூ300 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடியில் மொய்தீன் எம்எல்ஏ, அவரது பினாமிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து திடீர் சோதனை நடத்தினர். சுமார் 22 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து மொய்தீனின் 2 வங்கிக் கணக்குகளும், ரூ30 லட்சத்திற்கான நிரந்தர வைப்புக்கணக்கும் முடக்கப்பட்டன. இந்தநிலையில் வரும் 31ம் தேதி கொச்சியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறி எம்எல்ஏ மொய்தீனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் கொடுத்து உள்ளது. கூட்டுறவு வங்கியில் இவரும், இவருக்கு நெருக்கமான சிலரும் கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தை முதலீடு செய்ததாக ஏற்கனவே புகார் கூறப்பட்டது. இது தொடர்பான ஆவணங்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்திருந்தால் எம்எல்ஏ மொய்தீன் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

The post கூட்டுறவு வங்கியில் ரூ300 கோடி மோசடி; கேரள மாஜி அமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: 31ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: