மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி, ராகுல் அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1984ம் ஆண்டு முதல் 89ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்த ராஜிவ்காந்தியின் 79வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘‘முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்’’ என கூறி உள்ளார்.

தந்தையின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிடித்தமான லடாக்கின் பாங்காங் ஏரிக்கு சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்கு ராஜிவ்காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ராகுல் தனது டிவிட்டரில், ‘‘அப்பா, உங்களைப் பற்றிய விலைமதிப்பற்ற நினைவுகளில், இந்தியாவுக்காக நீங்கள் கண்ட கனவுகள் நிரம்பி வழிகின்றன. ஒவ்வொரு இந்தியாவின் போராட்டங்களையும் கனவுகளை புரிந்து கொள்தல், இந்தியத் தாயின் குரலை கேட்பது என உங்கள் பாதையில் நடக்கிறேன்’’ என கூறி உள்ளார்.

டெல்லியில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடமான வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள அவரது படத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பாஜ முன்னாள் எம்பி சுப்பிரமணியசாமி உள்ளிட்டோர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி, ராகுல் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: